போற்றுதும்..!

போற்றுதும் பொன்தமிழை புத்தேள் உலகினுக்கும்
ஆற்றல் அடைகொடுக்கும் அன்னையினை மற்றிங்கே
காற்றும் வருமுன்பே கடிபுகழ் தான்கொண்ட
பாற்கடல் அமுதனைய பாதிகழும் செவ்வியினை

என்றும் ஏற்றமே என்தமிழின் எழில்விளங்க
மன்றத்தில் மாண்போடு மறுக்கின்றோர் தனையெதிர்த்து
என்றுமுள தென்றமிழில் இயற்றிடுவோர் தம்வாழ்க்கை
நின்று நிலைத்துவிடும் நித்திலத்தாள் அவள்புகழால்

மூவேந்தர் மடிவளர்ந்து முற்றும் கலைபடைத்து
பாவேந்தர் உளம்நிற்கும் பைங்கொடியே செந்தமிழே
சாவேந்தும் வேளையிலும் சந்தனத் தமிழ்மணத்தை
நாவேந்தி நானிருக்க நல்லருள் புரிந்திடுக

பாவலர் தம்நாவில் பயின்றுவரும் தென்றலவள்
காவலராம் வேந்தரிடம் கவினுறையும் காலமகள்
மேவியிந்த மேதினியில் மென்மேலும் மெருகேறும்
ஆவிதிகழ் தமிழ்மகளின் ஆன்றபுகழ் உலகறியும்

அன்புடன்
முனைவர்.க.சங்கரநாராயணன்

0 comments: